புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

அக்குப்பங்சர்....கேள்விகளும், பதில்களும்




அக்குப்பங்சர் சிகிச்சை முறை' என்பது என்ன?

அக்குப்பங்சர் என்பதை 'சிற்றூசி மருத்துவம்' அல்லது 'குத்தூசி மருத்துவம்' எனலாம். உலகின் மிகத்தொன்மையான மருத்துவக் கலைகளில் ஒன்று. சீனப்பாரம்பரிய மருத்துவமுறைகளில் சிறந்த ஒரு பகுதியாக பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வளர்ந்துள்ள ஆற்றல்மிகு சிகிச்சை முறை.

மருந்தளித்துக் குணப்படுத்தும் முறைகளில் தலைசிறந்த உன்னத முறையாக (Supreme system)ஹோமியோபதியும், மருந்தில்லாமல் குணப்படுத்தும் முறைகளில் தலைசிறந்த முதன்மைத் தகுதி வாய்ந்த முறையாக அக்குப்பங்சரும் திகழ்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக உலக மக்களிடம் மிகவும் பிரபலமடைந்து வரும் மருத்துவமுறை இது.

பட்டினியும் நோய்களும் மலிந்த சீன தேசத்தை இன்று சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியதில் அக்குப்பங்சரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தியா போன்ற நாடுகள் சீன வெற்றிப் பயணத்தின் பின்னணியைப் புரிந்து பின்பற்ற வேண்டும்.

அக்குப்பங்சரின் அடிப்படை பார்வை என்ன?

'கீ' (Qi) எனப்படும் ஆற்றலின் (Bodys Energy) சீரான இயக்கத்தை சார்ந்ததே ஆரோக்கியம் என்ற தத்துவ அடிப்படையில் அமைந்தது சீன அக்குப்பங்சர். ஒரு மனிதன் முழு நலத்தோடு இருக்கிறான் என்றால் அவனது உடல் முழுவதும் சக்தியோட்டம் சீராகப் பாய்கிறது என்று பொருள். நோய் ஏற்பட்டுள்ளது என்றால் சக்தி ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று பொருள். இதன் வெளிப்பாடாக வெவ்வேறு நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். மிக மெல்லிய ஊசிகள் மூலம் சிகிச்சை அளித்து சக்தி ஓட்டத்தைச் சீர்படுத்தி, நோய்களிலிருந்து விடுதலை பெறுதலே அக்குப்பங்சரின் குறிக்கோள் ஆகும்.

அக்குப்பங்சர் சிகிச்சையில் காயம், வலி, ரத்தக்கசிவு எதுவும் ஏற்படுமா?

ஊசி என்றதும் ஆங்கில மருத்துவமுறையில் பயன்படும் சிரஞ்சுடன் கூடிய ஊசிதான் எல்லோரின் நினைவுக்கும் முதலில் வரும் அல்லது மருத்துவமனைகளில் சிறு வயது முதல் ஊசி குத்தலால் பட்ட வலிகள் வரும். அதனால் பெரும்பாலோர் ஊசியை விரும்புவதில்லை. நமது சமூகத்தில் Needle Phobia  எனப்படும் ஊசி மீதான பயம் பலருக்கும் உள்ளது.

அக்குப்பங்சர் ஊசி இத்தகைய வலியை ஏற்படுத்தாது. மயிரிழை போன்ற மெல்லிய ஊசிகள் உடலில் செருகப்படும் போது ஒருவித உணர்வு மாற்றம் ஏற்படுவது இயற்கை. இதனால் காயமோ, ரத்தக் கசிவுகளோ பொதுவில் ஏற்படுவதில்லை. சிலருக்கு மெல்லியதொரு வலியுணர்வு, சிலருக்கு மெல்லிய அதிர்வு உணர்வு, சிலருக்கு குறுகுறு உணர்வு, சிலருக்கு லேசான வலி, சிலருக்கு லேசான மதமதப்பு இருக்கக்கூடும். ஆனால் இந்த உணர்வுகளால் தொடர் பாதிப்புகள் நேராது. மேலும் இவை நீடிக்கும் காலஅளவு மிகக் குறைவு. மேற்குறிப்பிட்ட உணர்வுகள் எல்லாமே அக்குப்பங்சர் சிகிச்சையின் ஆற்றல் வெளிப்படுவதன் அறிகுறிகளே.

மருந்து, மாத்திரைகள் உண்பது போல அக்குப்பங்சர் சிகிச்சை தினமும் செய்ய வேண்டுமா?

சில நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை துவக்கத்தில் சில நாட்கள் தினசரி தேவைப்படலாம். மற்ற பெரும்பாலோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் (3 நாள், 5 நாள், 1 வாரம், 2 வாரம் என்று) சிகிச்சை பெற்றாலே போதும்.

சிகிச்சையளிக்கும் போது ஆழ்நிலைக் காரணங்களின் தன்மைக்கேற்ப பிரதிவினைகள் ஏற்படும். சில நோய்கள் வெகு ஆழமானவை  (Deep seated) . பலமுறை சிகிச்சைக்குப் பின்னரே மெதுமெதுவாகக் குணமளிப்பு நிகழும். மற்ற பல நோய் நிலைகளில் ஒருசில சிகிச்சைகளிலேயே துரிதமான நல்விளைவுகள் ஏற்படும்.

அக்குப்பங்சர் சிகிச்சைக்கு முன் பின் சாப்பிடலாமா? உடற்பயிற்சி செய்யலாமா?

சாப்பிடாமல் வெறும் வயிற்றிலிருக்கும்போது சிலரது ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அப்போது அக்குப்பங்சர் சிகிச்சை அளித்தால் மயக்கம் ஏற்பட்டு விடும். எனவே சிகிச்சைக்கு சிறிது முன்பாக சிறிதளவேனும் சாப்பிட்டிருப்பது நல்லது. வயிறு புடைக்க உண்ணக்கூடாது.

அக்குப்பங்சர் சிகிச்சைக்குப் பின் சில மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் சிகிச்சைக்கு சற்று முன்னர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. அது சிகிச்சைக்கு இடையூறாக அமையும்.

எப்போதெல்லாம் அக்குப்பங்சர் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும்?

அதிக பலவீனமாயுள்ளபோது, பசி நேரம், மிகு உணர்ச்சியுள்ள நிலையில், உடலுறவு முடிந்த சிறிது நேரத்தில் அக்குப்பங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அக்குப்பங்சர் சிகிச்சையுடன்... ஹோமியோ, சித்தா, மூலிகை மருந்துகளைக் கூட இணைத்து உண்ணக்கூடாது, எந்த சந்தர்ப்பத்திலும் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்று சிலர் கூறுவது பற்றி...?

அக்குப்பங்சர் என்பது மருந்தில்லா மருத்துவம் என்பது உண்மையே. ஆனால் சீனப் பாரம்பரிய மருத்துவமுறைகளில் அதுவும் ஒன்று. தேவைக்கேற்ப எண்ணற்ற சீன மூலிகை மருந்துகளை அக்குப்பங்சருடன் இணைத்துச் சிகிச்சை அளிப்பது சீனாவின் பல்லாயிரமாண்டு மருத்துவ அனுபவம். இதனை அக்குப்பங்சரின் தனித்தன்மையை அழிக்கும் செயலாக கருதுவது அறிவுக்கு பொருத்தமற்றது. இத்தகைய கண்மூடித்தனமான கொள்கைகளால், விரும்பத்தகாத நடைமுறைகளால் பாதிக்கப்படுவது மக்களே.

அக்குப்பங்சரின் தாயகமான சீனாவில் தாயக மூலிகை மருந்துகளும் அக்குப்பங்சரும் இணைந்து வெற்றிகளைக் குவிப்பது போல, ஒருங்கிணைந்த (இயற்கை மருத்துவச்) சிகிச்சை தான் இன்றைய மற்றும் நாளைய மனிதர்களின் நவீன உடலியல், உளவியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும்.

எனவே அறிவியலுக்குப் புறம்பான, ஆபத்தான, அபத்தமான கருத்துக்கள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் மக்கள் விழிப்போடு புறக்கணிக்க வேண்டும்.

"ரத்தப்பரிசோதனை, சிறுநீர், மலப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற சோதனைகள் உண்மையான அக்குப்பங்சர் சிகிச்சைக்குத் தேவையில்லை" என்று ஒருசில அக்குப்பங்சர் மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயாளிகள் ஏற்கனவே பார்த்துள்ள ஆய்வு அறிக்கைகளைக் கண்ணால் பார்க்கக்கூட மறுப்பதும் சரியா?

மரபுமுறை அக்குப்பங்சர் மீதான அளவு கடந்த விருப்பத்தின்
காரணமாகவோ அல்லது பரிசோதனை முறைகள் எல்லாம் ஆங்கில மருத்துவத்தோடு மட்டுமே தொடர்புடையது என்ற அப்பாவித்தனம் காரணமாகவோ அல்லது தங்களை மற்ற (அக்குப்பங்சர்) மருத்துவர்களைவிட உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவோ அப்படி சிலர் கூறக்கூடும்.
அக்குப்பங்சர் சிகிச்சைக்கு இந்த ஆய்வுகள் மிகவும் அடிப்படையான தேவைகள் என்று கூற முடியாது என்றாலும் நோய்களின் தன்மைக்கேற்ப, மருத்துவருக்கு ஏற்படும் சில குழப்பங்களை, சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக, சிகிச்சையின் முன், பின் உடல் நிலைமை அறிவதற்காக, சிகிச்சையினால் கிடைத்து வரும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக பரிசோதனைகள் உதவும்; இவற்றை முற்றிலுமாய் நிராகரிப்பது அறிவுடைமையல்ல. அது நவீன சூழலுக்கேற்ப அக்குப்பங்சரை முன்னெடுத்துச் செல்ல உதவாது.


'ஒரு புள்ளி, ஒரு ஊசி, ஒரு நிமிடம்' என்ற சிகிச்சை முறைதான் சரியானது என்றும் Single Needle Therapy  எனப்படும் ஒற்றை ஊசிச் சிகிச்சைமுறை தவிர வேறு எந்த முறையில் சிகிச்சையளித்தாலும் அது அக்குப்பங்சர் அல்ல என்றும் சிலர் கூறுகிறார்களே?

அக்குப்பங்சர் நாடிப் பரிசோதனை பற்றி மருத்துவ உலகில் மாறுப்ட்ட கருத்துக்களும், விவாதங்களும், நடைமுறைகளும் உள்ளன. நாடிப்பரிசோதனை முறை சிகிச்சை மூலம் சிலபல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனினும் இதனைக் கற்றுத் தேர்வதும், தெளிவு பெறுவதும், வெற்றி காண்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

சீன நாட்டிலேயே நூற்றுக்கணக்கான வழிமுறைகளில் (Methodology) அக்குப்பங்சர் சிகிச்சையளிக்கப்படுவது உலகம் அறிந்த உண்மை. இம்முறைகளின் மூலம் விகிதாச்சார மாறுபாடுகளுடன் பயன்கள் கிடைப்பதால்தான் வெவ்வேறு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. அவை உலகெங்கும் பரவி வருகின்றன. ஒற்றை ஊசிமுறை தவிர, Multi Needle Therapy, Tens கருவி சிகிச்சை, Moxibution எனும் மாக்ஸா வைத்தியம், மின் தூண்டல் அக்குப்பங்சர் சிகிச்சை போன்ற முறைகளிலும் சிறப்பான உடல் நலப் பயன்கள் கிடைக்கின்றன என்பதை மக்கள் அனுபவம் வாயிலாக அறிந்துள்ளனர்.

மக்களின் சந்தேகம் என்னவென்றால் ஒரு புள்ளிச் சிகிச்சையைத் தொடர்ந்து நேரிலோ தொலைபேசியிலோ இஸ்லாமிய முறை பிரார்த்தனையும் இணைக்கப்படுவது ஏன் என்பதுதான். இவர்கள் எதைச் சிகிச்சை என நம்புகிறார்கள்? சீனாவின் எந்தப்பகுதியில் இத்தகைய அபத்தமான இறையியல் அக்குப்பங்சர் நடைமுறையில் உள்ளது.


'இந்திய அக்குப்பங்சரின் தந்தை' என்று Dr.பஸ்லூர் ரஹ்மான் அவர்களைச் சிலர் பெருமைப்படுத்திக் கூறுகிறார்களே?

டாக்டர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட டாக்டர். சித்திக் ஜமால், டாக்டர். பஸ்லூர் ரஹ்மான் இருவரும் ஆங்கில மருத்துவத் துறையில் பயின்று தகுதி பெற்றவர்கள். ஆயினும் அலோபதி மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டும், அக்குப்பங்சர் மருத்துவம் மீது கவனம் செலுத்தியும் மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். பின்னர் ஹோமியோ மருத்துவத்தையும் ஓரளவு கற்றுக் கொண்டு அதற்கு ஆதரவான பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர்.

பின்னர் "ஹோமியோபதியின் எதிரி ஹானிமனே!" என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தனர். ஹோமியோபதிக்கு எதிரான போலியான வலுவற்ற தர்க்கங்களை முன்வைத்து ஹோமியோபதியர்களை புண்படுத்தினர். ஹோமியோ மருத்துவத்தை சிறுமைப்படுத்தி எழுதி வந்தனர். அக்குப்பங்சரில் மிகச்சிறந்த சீர்திருத்தவாதிகளாக காட்டிக் கொண்ட இவர்களுக்கு மெல்ல மெல்ல ஊசி சிகிச்சை அக்குப்பங்சரில் அவசியமில்லை என ஞானோதயம் ஏற்படுகிறது. பின்னர் (தொட்டால் சுகம்) தொட்டாலே போதும் என்ற களமிறங்கினர். பின் தொடாமலே சுகம் என்றனர். பின் பிரார்த்தித்தால் சுகம் (இறையியல் மருத்துவம்) என்றனர். குர்ரானை தமிழ்படுத்தி வெளியிட்டு அக்குப்பங்சர் மருத்துவச் பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் முற்றிலுமாக மாற்றினர்.

இன்று டாக்டர். சித்திக் ஜமால் இல்லை. திடீரென்று அவர் கடும் நோய்வாய்ப்பட்டு மறைந்தார் என்று அவரது சீடர்களால் ரகசியமாக பேசப்பட்டது. அவரது மறைவு கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் டாக்டர். பஸ்லூர் ரஹ்மானை "இந்திய அக்குப்பங்சரின் தந்தை" என்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் முழுசக்தியையும் திரட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களில் ஒருசிலர் இடதுசாரி கருத்தோட்டம் உள்ளவர்களாக இருந்தும் ஆன்மீகத்தையும், மருத்துவத்தையும் குழப்பும் டாக்டர். பஸ்லூர் போன்றோரை உயர்த்திப் பிடிப்பது வருந்தத்தக்கது. அக்குப்பங்சர்... ஹோமியோபதி... தொட்டால் சுகம்... தொடாமலே சுகம்... பிரார்த்தித்தால் சுகம்... என எதிர்பரிணாம திசையில் செல்லும் பஸ்லூர் ரஹ்மானை எப்படி இந்திய அக்குப்பங்சரின் தந்தை என்று மாற்று மருத்துவத் துறையினரும் மக்களும் ஏற்க முடியும்?

No comments:

Post a Comment