புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

பயங்களைப் போக்கும் மலர் மருந்துகள்



கட்டுரை ஆசிரியர்:டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்.சாத்தூர்.



உலகில் மனப்பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார்? பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பிரச்சனைகள் என்ற வலைப்பின்னலுக்குள்தான் வாழ்ந்து வருகின்றான். பிரச்சனைகளின் அழுத்தத்தால் மனம் பாதிக்கப்படுகின்றது. மனம் பாதிக்கப்படும்போது மனிதனின் உயிராற்றல் (VITAL FORCE) பாதிக்கப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, தற்காப்புத்திறன் குறைகிறது. நோய்கள் சூழ்கின்றன.

எனவே நோய்க்கு மட்டும் மருந்தளித்து சிகிச்சை செய்து பயனில்லை. நோயாளி என்ற மனிதருக்கு அவரது மனத்திற்கு சிகிச்சை தேவை. சீர்குலைந்த மனம் செம்மைப்படும்போது ஜீவசக்தியும் செம்மைப்படுகிறது. உடலும் புதுப்பிக்கப்படுகிறது. நோய்கள் நீங்குகின்றன. மனிதன் நலம் பெறுகிறான்.

மனக்குழப்பங்களையும் அதன்பின் விளைவுகளாக ஏற்பட்ட வியாதிகளையும் நீக்கும் உன்னத மருத்துவ குணம் கொண்டவை பாட்ச்மலர் மருந்துகள். மனித இயற்கைக்கு மாறான, எதிர்மறையான மனநிலைகளை, எண்ணங்களை மாற்றியமைத்து உள்ளத்தில் ஆக்கப்பூர்வமான ஆற்றலைப் பெருக்கச் செய்யும் வல்லமை மலர் மருந்துகளுக்கு உண்டு.

வயதுக்கேற்ப, வளர்ப்பிற்கேற்ப, வாழ்க்கை சூழலுக்கேற்ப மனிதர்களிடம் பயம்படிந்து விடுகிறது. எந்த சூழ்நிலையிலும், எது பற்றியும் பயமே கொள்ளாத, பயம் என்றால் என்னவென்றே அறியாத ஒருவரும் உலகில் இருக்க முடியாது ஒவ்வொருவரிடமும் பயம் உள்ளது. அளவும் தன்மையும் மாறுபடலாம். சில பயங்கள் அவசியமானவையாக நியாயமானவையாக அறிவுப்பூர்வமானவையாக இருக்கக்கூடும். பல பயங்கள் அவசியமற்றவை. நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்பவை. நமது பல்வேறு தோல்விகளுக்கு இந்த அநாவசியமான பயங்களே மூலக்காரணங்கள். இத்தகைய பயங்களால் மனச்சமநிலை பாதிக்கப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் பலவீனப்படுகிறான். பயம் காரணமாக பதட்டமும், அமைதியற்ற தன்மையும், மகிழ்ச்சியற்ற நிலையும் ஏற்படுகிறது. பயங்களைப் போக்குவதற்கு மலர் மருத்துவமே சிறந்தது.

பொதுவாக பயங்களை அகற்ற "மிமுலஸ்" என்ற மலர் மருந்து அற்புதமாக உதவுகிறது. நமது சமூக அமைப்பில் பெண்களுக்கு வெட்கமும் பயமும் தாய்ப்பாலோடு கலந்து ஊட்டப்படுகிறது. "நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்" என்றான் பாரதி. இங்கே இவை பெண்களின் அடிப்படைக் குணநலன்கள் என்று தவறாகக் கற்பிக்கப்படுவதால் பயம் என்ற நோய்க்கு பெண்கள் அதிகளவில் பலியாகின்றனர். சாதாரண பல்லி, கரப்பான்பூச்சியிலிருந்து துவங்கி பெண்களின் பயங்கள் வாழ்க்கையின் சகல அம்சங்கள் மீதும் பரவிக்கிடக்கின்றன. "மிமுலஸ்" மருந்து மூலம் பயங்களிலிருந்து பெண்கள் விடுபட்டு இயல்பான மனநிலையைப் பெறலாம்.

மேலும் பயந்த சுபாவம் உள்ள ஆண், பெண், இருபாலருக்கும் உதவக்கூடிய மிமுலஸ் இருட்டில் செல்ல பயம் பூட்டிய அறையைத் திறக்க பயம், தனிமையிலிருக்க பயம், தனிமையில் பயணம் செல்லப்பயம், புதியவர்களைக் கண்டால் பயம், கூட்டத்தைக் கண்டால் பயம், இறந்தவர்களைக் கண்டால் பயம், பேய் பிசாசு பயம், பலர் மத்தியில் பேசப்பயம், பயம் காரணமாகத் திக்கித்திக்கிப் பேசுதல், நோய்வந்துவிடும் என்ற பயம், வந்த நோய் முற்றி இறந்து விடுவோம் என்ற பயம், மனிதர்களைக் கண்டு பயம், மிருகங்களைக் பயம் (பாதுகாப்பான நிலையிலும்) திருடர்கள் பயம், எல்லாவற்றிலும் பயம் எதற்கெடுத்தாலும் பயம் என்று பயங்களின் இரும்புப்பிடிக்குள் சிக்கிக் கொள்பவர்களை வெளியேற்றி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் அரிய மருந்து "மிமுலஸ்".

இரண்டுமுறை கர்ப்பமாகி, முதல் முறை 7வது மாதமும், இரண்டாம் முறை 6வது மாதமும் கருச்சிதைவுக்கு ஆளான பெண் சிகிச்சைக்கு வந்தாள். ஹோமியோ மருந்துகள் அளிக்கப்பட்டன. மூன்றாவது முறையாக கருத்தரித்து (HABITUAL ABORTION)  வழக்கமான கருச்சிதைவுக்கு ஆளாகாமல் 7 மாதமும் கடந்து விட்டது. 8வது மாதத்தில் கருச்சிதைவு நேர்ந்துவிடும் என்று அவள் பயந்தாள். அவளது பயத்தைப்போக்கி சுகப்பிரசவத்திற்குத் துணை புரிந்த மருந்து "மிமுலஸ்".

அண்ணன் வெளிநாடு செல்லும்போது தம்பியிடம் கடை வியாபாரத்தை ஒப்படைத்துச் செல்கிறார். அன்றுமுதல் தம்பியின் மனநிலை பாதிக்கப்படுகிறது. தன்னால் கடை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாததால் பயமும் பதட்டமும் அவரை அலைக்கழித்தது. அவருக்கு "மிமுலஸ்" என்ற மருந்தும், "லார்ச்" என்ற மருந்தும் அளிக்கப்பட்டது. விரைவில் நலமடைந்து, வியாபாரத்தில் ஆர்வமும் அக்கரையும் காட்டி நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறார்.

சில பயங்கள் காரணங்களின்றி வரக்கூடும். இதற்குரிய மருந்து "ஆஸ்பென்" இத்தகைய காரணகாரியமற்ற பயம் இரவிலோ, பகலிலோ எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்திலும் ஏற்படலாம். திடீரென உள்ளத்தைப் பயம் ஆக்கிரமிக்கும். பதட்டம் ஏற்படுத்தும் சகஜத்தன்மைகள் கெடும். வியர்த்துப் பரபரத்து பயத்தின் ரேகைகள் படித்த தோற்றத்துடன் காணப்படும். இவர்களிடம் என்னவென்று விசாரித்தால் "என்னவென்று தெரியவில்லை. ஏதோ ஒரு மாதிரி (பயம்) ஏற்படுகிறது" என்பார்கள்.

இவர்களது பயங்களுக்கான அடிப்படைகளை நாமும் அறிய இயலாது. இவர்களாலும் எடுத்துச் சொல்ல இயலாது. இவர்களது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பயன்படும் மலர்மருந்து "ஆஸ்பென்".

நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டு மிகவும் பதட்டமடைந்து பின்னர் விடியும் வரை தூக்கமின்றி தவித்த இளைஞர் ஒருவர் வந்தார். தனக்கு ரத்த அழுத்தமோ, உடல்நோய்களோ, மனம் சார்ந்த வேறு பிரச்சனைகளோ இல்லை என்றும், ஆனாலும் கடந்த சில நாட்களாக நடு இரவில் பயஉணர்ச்சி ஆட்கொண்டு உடல் பலமே இல்லாததுபோல் காணப்படுகிறது. பாதுகாப்பற்ற உணர்வு உண்டாகிறது என்று கூறினார். அவரது அறையில் பல கடவுள் படங்கள் மாட்டப்பட்டன. இரவு உறங்கச் செல்லும்முன் மிகுந்த பக்தியுடன் கும்பிட்டு விபூதியிட்டுக்கொண்டு உறங்கச் செல்லத் துவங்கினார். கடவுள் நம்பிக்கை கொண்ட அவருக்கு சற்றே மன ஆறுதல் தென்பட்டாலும் நள்ளிரவில் காரணமின்றி வரும் பயம் நீங்கவில்லை. அவருக்கு சுமார் 3 வாரங்கள் "ஆஸ்பென்" மருந்தளித்தபின் முழு நலமடைந்தார். நிம்மதியான தூக்கம் அவரைத் தழுவிக்கொண்டது.

பொதுவாக பயங்களைப் போக்கப் பயன்படும் மருந்து "மிமுலஸ்" என்றாலும் அதீதமான பயங்களுக்கும், மிரட்சிக்கும், பீதியடைதலுக்கும் (EXTREME FEAR & PANIC) "ராக்ரோஸ்" என்ற மலர் மருந்தே ஏற்றது. மனவலிமையும் தைரியமும் நிறைந்த நபர்கள் கூட சில அதிர்ச்சியூட்டும் சூழ்நிலைகளில் பீதியடையத்தான் செய்வார்கள். ஆனால் இம்மனநிலை தற்காலிகமானதாக இல்லாமல் நீடித்தால் "ராக்ரோஸ்" சிறப்பாகப் பயன்படும்.

தீ விபத்தோ, வாகன விபத்தோ, திடீர் வெள்ளம், புயல் போன்ற வேறு விபத்துக்களோ நடந்த இடங்களில் உள்ளவர்களிடம் பீதியும் உச்சகட்ட அச்சங்களும் காணப்படும். இம்மனநிலை நம்மைச் செயலிழக்கச் செய்யும். சில தந்திச் செய்திகள் நமது சந்தோசங்களைப் பறித்து விடும். பெரும் அச்சம் கலந்த வேதனையை ஊற்றெடுக்கச் செய்து விடும்.

காது இரைச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தார் ஒரு மூதாட்டி. தொடர்ந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்செயலாக ஒருமுறை சில ஆண்டு முன் அவரது வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தினைப் பற்றியும் அவர் அதில் பட்டபாடு பற்றியும் அதன் பின்னரே காது இரைச்சல் வந்தது என்றும் தெரியப்படுத்தினார். அவருக்கு சில மாதகாலம் "ராக்ரோஸ்" மலர் மருந்தும் சேர்த்து அளிக்கப்பட்டதால் முழுநிவாரணம் பெற்றார்.

பயங்களைப் பற்றிப் பயம் வேண்டாம். மலர் மருந்துகள் நமது பயங்களைப் போக்கும். மனதில் உறுதியும் தெளிவும் பிறக்கச் செய்யும். 

1 comment:

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 USD (3 Crore India Rupees) for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    ReplyDelete